Friday, March 12, 2021

கதை

சென்ற வாரம் https://engalblog.blogspot.com/  என்னும் வலைதளத்தில் வெளிவந்த என்னுடைய கதை.

கேட்டு வாங்கிப்போடும் கதை :  குழந்தையும் தெய்வமும் - வானம்பாடி 

எங்கள் தளத்தில் இன்று ஒரு புதிய எழுத்தாளர் அறிமுகம்! நமக்குதான் புதியவர்.  2005 லிருந்து பதிவுலகில் இருக்கும் வானம்பாடி  வானம்பாடி எனும் பெயரிலேயே வலைத்தளம் வைத்திருக்கிறார்.  சமீப காலங்களில் கீதா அக்கா பதிவுகளில் அவர் பெயர் பார்த்து, அவர் தளம் சென்று என்று அறிமுகமானவர்.  சமீப காலங்களில் நம் தளத்துக்கும்  வருகை தந்து கொண்டிருக்கும் அவரை வரவேற்கிறோம்.  கவிதையும் அழகாக எழுதுகிறார்.   இனி அவரிடமிருந்தும் அவ்வப்போது படைப்புகளை தொடர்ந்து எதிர்பார்க்கலாம் என்று நம்புகிறோம்.

குழந்தையும், தெய்வமும்  

வானம்பாடி 

எங்கள் வீட்டிற்கு  தினமும் சிறிது நேரம் வந்து செல்லத்  தொடங்கினாள்  தயஸ்ரீ.

ஏனோ அவளுக்கு என்னைப் பார்த்தால் மிகவும் பிடித்து விடுகிறது. என்னவர் என்னை ராஜிமா என்றே அன்புடன் அழைப்பார். அதைப்போலவே, என் பெயருடன்  அம்மா சேர்த்து "ராஜிம்மா " என்றே அழைக்கிறாள்! அம்மா என்று அவள் மழலையில் அழைக்கும் பொழுது நெகிழ்ந்து போகின்றேன். 

தயஸ்ரீயின் குடும்பம் இரண்டு  வருடங்களுக்கு  முன்பு தான் எங்கள் பக்கத்து வீட்டிற்கு குடி வந்தனர். நான் பள்ளிக்கு கிளம்பும் முன் டாடா சொல்ல வந்து விடுவாள். பின் பள்ளி முடிந்து வீடு திரும்பி கதவை திறக்கும் முன்பே வந்து காத்திருப்பாள். 'எனக்கும் கொஞ்சம் காபி குடுங்க ராஜிம்மா' என்பாள். எனக்கு பள்ளி விடுமுறை நாள் என்றால் அவளுக்குத்  தான் சந்தோஷமே! தோட்டத்து செடிகளுக்கு என்னுடன் நீரூற்றுவாள். குளித்து முடித்து  வந்து என்னிடமே தலை பின்னிக் கொள்ள வருவாள். ஞாயிற்றுக் கிழமை அவளுக்காகவே அடை செய்து விடுகிறேன் இப்பொழுதெல்லாம். அவள் அம்மா ஊட்டி விட்டால் அடம்  பிடிப்பாள். நான் ஊட்டினால் சமத்தாக சாப்பிட்டு விடுவாள். என் புடவை நுனி பிடித்து நடக்க நான் மயங்கித்தான் போகிறேன். 

அவளுக்கு  கதை கேட்கப் பிடிக்கும். குட்டி கதைகள் சொல்ல என்னவருக்கு மிகப் பிடிக்கும். வளமையான காடுகளும், அரண்மனைகளும், குடில்களும்,வயல்வெளிகளும் , கம்பீரமான யானைகளும், சிங்கங்களும், மானும், வேடனும் ,தந்திரக்கார நரியும், அணிலும், நன்றியுள்ள நாயும், பூனையும் , எளிமையான குடியானவரும், நல்ல பண்புடைய ராஜாக்களும், சித்திர குள்ளர்களும் , புத்திசாலியான ராணிகளும் , குறும்பு கொப்பளிக்கும் சிறுவர்களும் ,சிறுமியரும்  அவருடைய கதைகளில் அழகாய் பவனி வருவார்கள். இவரிடமும் ஒரு நல்ல கதை சொல்லி இருப்பார் என அறிந்ததில்லை. செல்லம் கொஞ்சி "எனக்கு கத  சொல்லுங்க மாமா" என்பாள். கதைகளில் சஞ்சரித்து , "ம்" கொட்டிக் கொண்டு, அவள் தூங்கிய பின் பூப்போல தாங்கி  அவள் வீட்டில் விட்டு வருவேன். 

போகிற போக்கில் விளையாட்டாய் , நாங்கள்  காணாத சந்தோஷத்தை வாரி இறைத்தாள் என்றே சொல்ல வேண்டும். வறண்டு கிடந்த இடத்தில் சிறு ஊற்றைப்  போல தோன்றி, பெருகி மகிழ்ச்சியாய் பொங்கினாள்  எங்கள் வாழ்வில். 

இவ்வளவு என்னிடம் எப்படி பழகினாள் என்று எனக்கே தெரியவில்லை. அவளுடைய அம்மா வித்யாவும்  மிகுந்த பாசமாகவே பேசுகிறாள். அவள் கருவுற்றிருப்பதால் என்னிடம் தயஸ்ரீ  இருப்பது பாதுகாப்பாகவும், தன்  வேலைகளை செய்து கொள்ள வசதியாகவும் இருப்பதாய் சொல்வாள். கடந்த ஆண்டு  பெரும் நோய்த்தொற்றின் பொருட்டு சில மாதங்கள் வீட்டில் தனியாக இருந்த பொழுது, மிகப்பெரிய ஆறுதலாக இருந்தாள். 

அவள் கேட்கும் கேள்விகளுக்கு சலிக்காமல் பதில் சொல்வார் என்னவர். "எதுக்கு உம்மாச்சி கண்ண குத்துது?" என்பாள் . "மேகம் எல்லாம் எங்க போகுது?" என்பாள். சில சமயம் ரொம்பவும் வானவியல் ஆராய்ச்சி  செய்து  , "ஏலியன் இங்க  வண்டுச்சுனா  ,  நா அது  கூட ஸ்பேஸ் கு போவேனே !" என்பாள். "எனக்கு இப்பவே ராஜிம்மா கூட ஸ்கூல் போகணும்" என்பாள். "என் பத்துடே  கு புடு டெஸ் வேணும்" என்பாள்.

எங்கள் மொழியும் கொஞ்சம் கொஞ்சம் பேசப் பழகிவிட்டாள். இறுகிய எங்கள் மனத்திற்கு இதமளித்தாள் .எனக்கும் அவருக்கும் சிறிது பயமாக கூட இருந்தது. நான் வீட்டின் வெறுமை பிடிக்காமல் பள்ளிக்கு வேலைக்கு செல்லத் தொடங்கி ஆறு வருடம் ஆகிறது. இப்பொழுது இருக்கும் வீடு சொந்த வீடென்றாலும், பள்ளி வெகு தூரம் செல்ல வேண்டியதாய் இருந்தது. 

என் பள்ளிக்கு அருகிலேயே நாங்கள் வீடு பார்த்துக் கொண்டிருந்தோம். வீடு கிடைத்தபாடில்லை. அவர் என்னைப்  பற்றி நன்கு அறிந்ததால் இப்பொழுது மும்முரமாக வீடு பார்க்கும் வேலையில் ஈடுபட்டுள்ளார் . குழந்தைக்காய் நான் ஏங்கிய ஏக்கம் கொஞ்சமில்லை. செல்லாத கோவிலில்லை , வேண்டாத தெய்வமில்லை. பார்க்காத வைத்தியமில்லை. உடலும், மனமும் ரணமாகி போனது தான்  மிச்சம். ஆகிவிட்டது வருடங்கள் பன்னிரண்டு. இதற்கிடையே, ஊருக்கு சென்றால், சொந்தங்களின் கேள்விகளும், தேவையில்லாத அறிவுரைகளும். எங்கும் விசேஷத்திற்கும் செல்வதில்லை. பிறரின் ஆதங்கமும், பரிகாசமும் என்னை மென்மேலும் வாட்டுவதால் சொந்த ஊருக்கு செல்வதையே நிறுத்தி  விட்டோம். எப்பொழுதாவது பெற்றோர் வந்து செல்வதுண்டு.

நேற்று தான் என்னவர் , பள்ளிக்கு பக்கத்திலேயே தனது நண்பரின் அபார்ட்மெண்ட் வீடு காலியாவதாக சொல்லியிருந்தார். இன்று தயஸ்ரீயின் நான்காவது  பிறந்தநாள் என்று அவள் அம்மா அழைத்திருக்கிறாள். இன்று காலை 10 மணிக்கு வீடு பார்க்கச் சென்றோம். இருவருக்கும் பிடித்திருந்ததால் அட்வான்ஸ் கொடுத்து விட்டும் வந்து விட்டோம் . 

மனம் தான் நிலை கொள்ளவில்லை. வரும் வழியில், "Grasp" துணிக்கடைக்கு சென்று  வெள்ளை நிறத்தில் மஞ்சள் பூக்கள் எம்பிராய்டரி  செய்த frock    ஒன்றும் அதற்கு ஏற்றார் போல அழகிய  கிலிப்சும் , ஹேர்பேண்ட்  வாங்கிக்  கொண்டோம். 

அன்பிற்கு எல்லை இல்லை தானே ...பகை தானே கொல்லும் ?  எனக்கோ அன்பென்னும்  அமுது சிறிது சிறிதாக மிகுந்து , நஞ்சாகி விடுமோ என பயமுறுத்துகிறது.

 இன்று  மாலை நடைபெற்ற பிறந்த நாள் விழாவில், அவள் அம்மாவிற்கு கேக் ஊட்டிவிட்டவள், என்ன நினைத்தாளோ, ஓடி வந்து என்னைக்  கட்டிப் பிடித்து, முத்தமிட்டு , எனக்கும் கேக் ஊட்டிவிட்டாள். அவள் தாத்தா, பாட்டி எங்களை ஆசிர்வதித்தனர்.


அவளிடம் விளையாடிவிட்டு ஒன்பது மணிக்கு மேல் தான் வீடு திரும்பினோம். இரவு  வெகு நேரம் உறக்கம் வரவில்லை.  

இந்த அன்பும் ரயில் சிநேகம் போலத்தானோ?, என மனதில் குமைந்து கொண்டு வெறுமனே கண் மூடி  படுத்திருந்தேன். கானல் நீராகி விடுமோ இதுவும் வீடு மாறினால்? என நினைத்து தவித்தேன். எத்தனையோ முறை,  என்னவரிடம்  ஒரு குழந்தையை தத்து எடுத்துக் கொள்வோம்  என்று சொல்லி இருக்கிறேன்.

மௌனம் மட்டுமே சாதிப்பார்.  ஆனால் இப்போது தூங்கியிருப்பார் என நினைத்த என்னவர் ,  எழுந்து உட்கார்ந்து பேசத்  தொடங்கினார்.  இதோ இந்த நொடி,விடியப்போகும் இவ்வேளையில், முதல் முறையாக  ஒரு குழந்தையை  தத்தெடுத்துக் கொள்வோமா ? என அவரே சொல்ல கேட்கிறேன். சொல்ல வார்த்தை வரவில்லை.நெகிழ்ச்சியில் கண்ணீர் மட்டுமே வருகிறது . இந்த வீட்டிலேயே இருப்போம். தயஸ்ரீக்கு துணையாய் இன்னொரு குழந்தையை  உன் விருப்பம் போல வளர்ப்போம் என்றும் சொல்கிறார் ! 

ஆழமாக கண்கள் நோக்கி, தோள் சாய்ந்து கொள்கிறேன்! ஆதுரமாய் தலை கோதி புன்னகைக்கிறார் நிஜமாய்!  இன்று குழந்தையும், தெய்வமும் ஒன்றாக கூடி என்னிடம் வந்தது போல் உணர்ந்தேன். கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும் என்று கேள்விப்பட்டுள்ளேன்.இன்று கண்ணார கண்டு விட்டேன். கரைத்தே விட்டாள் அவர் மனதை! என்னவரின்  மனதை இளக்கி, தெளிய வைத்த தயஸ்ரீக்கு நன்றி சொல்ல வேண்டும் நாளை! 

= = = =